இன்று "அவருடைய" சத்தம்
ஏப்ரல் 7
🔸️ சரீர ஒடுக்கமல்ல "சுயம்" சாக வேண்டும்! 🔸️
முப்பத்தி மூன்றரை ஆண்டுகள் தன் பிதாவுக்கு முன்பாக சிலுவை சுமந்து வாழ்ந்த நமது ஆண்டவரின் கடைசி சில மணி நேர சிலுவைப்பாடுகள் "மனுஷர் பார்வைக்கு" தவிர்க்க முடியாததொன்றாய் இருந்தது. ஆகவே, பாடுகளின் வெளிப்புற சூழ்நிலையைக் கண்ட எருசலேம் குமாரத்திகள் புலம்பி அழுதார்கள்! அப்போது நமது ஆண்டவர் கூறிய பதில் ஆழமான பல செய்திகளைக் கொண்டிருந்தாலும், அவர் 'பளிச்சென்று' கூறிய கெம்பீர பதில் என்னவென்றால், தான் "பச்சை மரம்" என கூறியதுதான்! (லூக்கா 23:27-31). அதாவது தன் சுய சித்தத்தை ஒருபோதும் செய்யாமல் அவைகளைச் சிலுவையில் அறைந்து பிதாவின் சித்தம் செய்கிறபடியால் தான் "பசுமையாக" இருப்பதாகவே கூறினார்.
தங்கள் சுய சித்தங்களையே எப்போதும் நிறைவேற்றி, விண்ணின் மகிமைக்குள் நடத்தும் சிலுவையின் பாதையைக் காணாதவர்களை "பட்ட மரம்" என்றும் கூறினார். ஆ! எத்தனையாய் பிதாவின் நாம மகிமைக்கென நமது கேப்டனாயிருக்கும் ஆண்டவர் "சிலுவையின் மேன்மையை" விளங்கச் செய்துவிட்டார்!! 'பட்ட மரத்தின்' வாழ்க்கை வாழும் ஜனங்கள்தான் இனிமேல் தங்கள் 'சுய வாழ்விலிருந்து' விடுபடுவதற்காக துயரம் கொண்டு அழ வேண்டும். . . ."எனக்காக அழாதீர்கள்" என்றே கூறினார். எதைச் செய்ய வேண்டாம் எனக் கூறினாரோ, அதைத்தான் இன்றைய கிறிஸ்தவம் "லெந்து நாட்கள்" என இயேசுவுக்காய் துக்கம் கொண்டாடுகிறார்கள்.
இவர்களின் "புனித வெள்ளி" ஆசரிப்புகளை இயேசு கேட்கவில்லை! இவ்வாறெல்லாம் அனுசரிப்புகளை ஏற்படுத்தி, சாத்தான் ஜனங்களின் கண்களை குருடாக்கி. . . வாழ்நாளெல்லாம் (அனுதினமும்) பின்பற்ற வேண்டிய உன்னத "சிலுவையின் பாதையை" அவர்களுக்கு மறைத்து விட்டான்!
வெளிப்புற சரீர ஒடுக்கம் மிக எளிது. அதற்கொன்றும் தேவகிருபை தேவையில்லை. கடினம் கொண்ட நம் சுயம் "கிறிஸ்துவின் பாடுகளுக்குள்" உட்பட்டு மரிப்பதற்கே ஒருவன் கிருபையில் பலப்பட வேண்டும்!
ஜெபம்:
பரம தந்தையே! உலக அனுசாரத்தைப் போலவே எளிதான சரீர ஒடுக்கத்தை, "சிலுவை" என கருதிய எங்கள் மதியீனத்தை மன்னியும்! "சுயத்தை" அழிக்கும் மெய்யான ஜெயத்தை தந்தருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday



0 Comments