இன்று "அவருடைய" சத்தம்
ஆகஸ்ட் 11
🔸️ நம் மன நோக்கம் தூய்மையாய் இருத்தல் வேண்டும்! 🔸️
நம்முடைய உள்ளான மனிதனுக்குள் காணப்படும் சகல பாவங்களையும் முற்றிலுமாய் கழுவிக்கொள்ள நாம் பிரயாசப்பட வேண்டும். குறிப்பாக, யாரோ சிலர்மீது கொண்ட 'தவறான மன நோக்கங்களை' மிக கவனமாய் நம்மிடமிருந்து கழுவிக்கொள்ள வகை தேடுகிறவர்களாய் இருக்க வேண்டும். அப்படியில்லை என்றால், அந்த உள்ளான மன நோக்கங்கள், "மறைந்திருக்கும் புற்றுநோயைப் போல்" நம்மிடம் தங்கி ஒருநாள் நம்மை அழித்துவிடும்!
பழைய ஏற்பாட்டில், சவுல் ராஜாவின் உறவினனான 'சீமேயி' என்பவனைக் குறித்து நாம் வாசிக்கிறோம். சவுல் மரித்து, இஸ்ரவேலின் ராஜாவாய் தாவீது வந்தவுடன், இந்த மனுஷன் தன் இருதயத்தின் ஆழத்தில் தாவீதைக் குறித்து ஒரு கசப்பை வைத்திருந்தான் (2 சாமு.16:5-14). இவ்வாறு நீண்ட நாட்களாய் சீமேயின் இருதயத்தில் மறைந்திருந்தவைகள் ஒருநாள் வெளியே வந்துவிட்டது! தன் சொந்த மகன் அப்சலோமின் முரட்டாட்டத்தால், தன் ஜீவன் தப்ப தாவீது ஓடிக் கொண்டிருந்த சமயத்தில், இந்த சீமேயி தாவீதிடத்தில் வந்து, தேவனால் நியாயம் தீர்க்கப்பட்ட "இரத்தப்பிரியன்" என இழித்து அவன்மீது கற்களை எறிய தொடங்கினான்!
ஆம், நமக்குப் பிடிக்காதவர்கள் ஒரு துன்பத்தில் அகப்படும்போது, நம் இருதயத்தில் மறைந்திருக்கும் சகல தீய எண்ணங்களும் வெளியரங்கமாய் கொட்டப்பட்டுவிடும்!!
பிற்காலங்களில், அப்சலோம் கொல்லப்பட்டு தாவீது மீண்டும் ராஜாவாய் திரும்பி வந்த சமயம், சீமேயி பயந்து தாவீதிடம் மன்னிப்பு கேட்கும்படி ஓடிவந்தான். தாவீது அவனை மன்னித்து, "நான் உன்னைக் கொல்லமாட்டேன்" எனவும் அவனுக்கு வாக்கு தந்தான்!
இப்போது சக்கரம் மாற்றி சுழன்று, சீமேயின்மீது கொண்ட உள்ளான கசப்பை தாவீது தன்னிடமிருந்து கழுவிக்கொள்ள தவறிவிட்டான்! அதனிமித்தமாய், அவன் மரிப்பதற்கு முன்பாக, தன் மகன் சாலமோனைப் பார்த்து "சீமேயி உன்னிடத்தில் இருக்கிறான். அவனை நான் கொன்றுபோடுவதில்லை என்று கர்த்தர் மேல் ஆணையிட்டு கொடுத்தேன். ஆகிலும் நான் தந்த வாக்கு உனக்கு பொருத்தமாகாது. நீ ஞானமாய் நடந்து 'ஏதாகிலும் தந்திரமான வழியில்' சீமேயியை குற்றமுள்ளவனாய் கண்டு, அவனைக் கொன்றுபோடு!" எனக் கூறினான் (1இராஜா.2:8- 10). சாலமோனும் அவ்வாறாகவே சீமேயியை பழிவாங்கி, பின்பு மரித்துப்போனான்! இது எத்தனை துயரமான மரணம்... ஒரு தேவனுடைய மனுஷனாய் பல வருடங்கள் வாழ்ந்துவிட்டு முடிவில் பழிவாங்கி அடையும் இழிவான மரணம்! தீய மனநோக்கம் கூடவேகூடாது!
ஜெபம்:
எங்கள் பரம தந்தையே! பிறரை குறித்த "தவறான" மன நோக்கங்களை நாங்கள் நித்தமும் கழுவி வாழாவிட்டால், எங்கள் பக்தியின் ஜீவியம் வீணாகிவிடும் என காட்டியமைக்கு நன்றி! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday



0 Comments