இன்று "அவருடைய" சத்தம்
மார்ச் 25
🔸️ பரம தகப்பனின் அன்பை விசுவாசியுங்கள்! 🔸️
இன்று அநேகர் பிதாவாகிய தேவனை ஒரு மிகுந்த கண்டிப்புள்ளவராகவும், இயேசு மாத்திரமே தங்களை நேசிப்பதாகவும், தவறாக அபிப்பிராயம் கொண்டிருக்கிறார்கள். சத்தியத்தை சாத்தான், ஜனங்களுக்குள் எவ்வளவாய் திரித்து வழங்கியிருக்கிறான் என்பதற்கு இது ஒரு சான்றாகும்.
நம்முடைய பாவங்களிலிருந்து நம்மை இரட்சிக்கும்படி இயேசுவை அனுப்பியதே பிதாவினுடைய அன்புதான்! இயேசு சீஷர்களுக்கு கூறும்போது, "பிதாதாமே உங்களை சிநேகிக்கிறார்!" எனச் சொன்னார். மேலும் அவர் சீஷர்களிடம் கூறும்பொழுது, "உங்கள் பரமபிதா" ஆகாயத்துப் பறவைகளைப் போஷித்துக் காட்டுப்புஷ்பங்களை உடுத்துவிப்பார் என்றால் உங்களை பராமரிப்பது அதிக நிச்சயம் அல்லவா! என கூறினார். தொடர்ந்து அவர் கூறும்போது, "உங்கள் பரமபிதா உங்களின் எல்லா தேவைகளையும் அறிந்திருக்கிறபடியால், நீங்கள் ஒன்றிற்கும் கவலைப்படாதீர்கள்" (மத். 6:26-34) எனவும் கூறினார். மேலும் அவர் தன் சீஷர்களிடம் "இந்த உலகத்தகப்பன் தன் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது பரலோகத்திலிருக்கிற 'உங்கள் பிதா' நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?" (மத். 7:11) என்றும் கூறினார்.
"இதெல்லாம் என்ன? சாதாரண அற்பக் காரியங்கள் தானே!" என நீங்கள் கூறலாம். ஆனால், நீங்கள் தேவனிடம் ஜெபிக்கும் பொழுது, அவர் உங்கள் வேண்டுதல்களைக் கேட்டுப் பதில் தருவாரென நீங்கள் உண்மையாகவே விசுவாசிக்காமல் இருந்த எத்தனையோ நேரங்களை எண்ணிப் பாருங்கள். நீங்கள் ஏன் அவ்விதம் விசுவாசிக்கவில்லை? ஏனெனில், அவர் உங்கள் மீது வைத்திருக்கும் பட்சமும் பாசமுமான தகப்பனுடைய அன்பை திட்டவட்டமாக உங்கள் கண்கள் காணாததினாலேயே நீங்கள் விசுவாசிக்கவில்லை.
அவர் அன்போடு "சிறியவன் முதற்கொண்டு பெரியவன் வரைக்கும் எல்லாரும் என்னை (பிதாவாக) அறிவார்கள்" (எபி.8:11) எனக் கூறினார். அவர் "சிறியவனை" முதலாவதாக குறிப்பிட்டதைக் கவனித்தீர்களா!!
ஒருவேளை நீங்கள், நேற்றுதான் மறுபடியும் பிறந்தவராக இருந்தாலும், நீங்களும் தேவனைத் தைரியத்தோடு கிட்டிச் சேர்ந்து, "ஓ தேவனே, நீர் என் தகப்பன்! நான் உம்முடைய பிள்ளை! உம்மோடு பேசி உறவாடும் உரிமை எனக்கும் உண்டே!" எனக் கூறிடலாம். தேவனிடம் ஜெபிக்கும்பொழுது இவ்விதமே அவரைக் கிட்டிச் சேரும்படி இயேசு கூறினார்.
ஜெபம்:
எங்கள் பரம தந்தையே! தகப்பனின் அன்பை 'திரை விலக்கி' காண்பித்த ஆண்டவர் இயேசுவுக்கு நன்றி! அவிசுவாசமான கவலை தோய்ந்த எங்கள் ஜெப வாழ்வை மாற்றி புதிதாய் மலரச் செய்திடும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday



0 Comments