இன்று "அவருடைய" சத்தம்
ஏப்ரல் 26
🔸️ 'மீதியான' கூட்டத்தாரோடு இருந்திடக்கடவோம்! 🔸️
வெளிப்படுத்தின விசேஷம் 14-ம் அதிகாரம் 1-5 வசனங்களில், தங்கள் உலக வாழ்வில் கர்த்தரை முழு இருதயத்துடன் பின்பற்றின சீஷர்களின் சிறு கூட்டத்தைப் பற்றி படிக்கிறோம். கடைசி நாளில் இவர்களே ஜெயம் கொண்டவர்களாய் இயேசுவுடன் நிற்பார்கள்!
பாவமன்னிப்பு பெற்றவர்களின் பெருந்திரளோ ஒருவரும் எண்ணக்கூடாததாய் இருந்தது. (வெளி.7:9,10). ஆனால் இந்த சீஷர்களின் கூட்டமோ அதைவிட பன்மடங்கு சிறிய ஒன்றேயாகும்! இதை எண்ணிவிட முடியும்.
பூமியின்மேல் தேவனுக்கு உண்மையும் செம்மையுமாய் இருந்த மீதியானவர்கள் இவர்களே. இவர்களே சோதிக்கப்பட்டு தேவனுடைய நற்சான்றிதழைப் பெற அங்கீகாரம் பெற்றவர்கள்! இவர்களைக் குறித்து "தங்களை கறைப்படுத்தாதவர்கள்.... , ஆட்டுக்குட்டியானவர் எங்கு சென்றாலும் பின்பற்றுகிறவர்கள்.... , இவர்கள் வாயிலே கபடம் காணப்படவில்லை ... , மாசில்லாதவர்கள்" என்று தேவனே நற்சான்று வழங்குகின்றார்!! (வெளி.14:4,5).
இவர்களே தேவனுக்கு முதற்பலனானவர்கள்! இவர்களே கிறிஸ்துவின் மணவாட்டியும் ஆவர்! ஆட்டுக்குட்டியானவரின் கலியாண நாளிலே (வெளி.19:7), சிறிதும் பெரிதுமான எல்லாக் காரியத்திலும் இவர்கள் தேவனுக்கு முற்றிலும் செம்மையும் உண்மையுமாய் இருந்தது தகும் என்பது, அன்று ஒவ்வொருவருக்கும் தெளிவாகும்.
தங்களுக்கானதைத் தேடி உலக லாபத்தை தேடுபவர்கள், தங்களுக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு என்பதையும் அந்த நாளில்தான் முழுவதும் உணருவார்கள். தங்களுடைய தகப்பனையோ, தாயையோ, மனைவியையோ, பிள்ளைகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ கர்த்தரைக் காட்டிலும் அதிகமாக நேசிப்பவர்கள் அந்த நாளில் தங்கள் நித்திய இழப்பை கண்டுகொள்வர்!
அந்த நாளில், இயேசுவின் கட்டளைகளுக்குப் பூரணமாய் கீழ்ப்படிந்து, அவர் நடந்தது போலவே தாங்களும் நடக்க தேடினோரே .... பூமியின் மேல் மிகவும் ஞானம் உள்ளவர்கள் என்பதும் வெளிப்படும்! கிறிஸ்தவத்தின் போலி மரியாதைகள் மெய்யாகவே குப்பைகள்தான் எனவும் அந்த நாளில் தெளிவாய் காணப்படும்!!
ஓ.... , அந்த நாளில் நாம் காணப்போகும் நிதரிசனமான சிலவற்றை இப்போதே தெளிவாகக் காணும்படி நமது கண்கள் திறக்கப்படட்டும்! ஒரு மனுஷன் எக்காலத்தும் அடையக்கூடிய மிகப்பெரும் கௌரவம், தேவனாலே சோதிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டவனாகி, கிறிஸ்துவின் மணவாட்டியாகப் பங்கடைவதேயாகும்!
ஜெபம்:
பரம பிதாவே! காலச்சக்கரத்தின் முடிவில், சோதனை நேரங்களில் உம்மையே பற்றிக் கொண்டு வாழும் "அந்த உத்தம மீதியானவர்களின்" கூட்டத்தில் நாங்களும் இருந்திட அருள்புரியும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday



0 Comments