இன்று "அவருடைய" சத்தம்
ஜூலை 30
🔸️ பழிவாங்கும் விஷம் நம்மிலிருந்து அகல வேண்டும்! 🔸️
பழிவாங்கும் கொடிய சுபாவமும் நம் ஒவ்வொரு நாடி நரம்புகளிலும் விஷம்போல ஊறி இருக்கிறது. தனக்குத் தீங்கு செய்துவிட்ட ஒருவனை ஏதாகிலும் ஒரு விதத்தில் பழி வாங்கிட நாம் யாவருமே துடித்து நிற்கிறோம். பழைய ஏற்பாட்டின் தரத்தின்படி ஒருவன் இன்னொருவனுடைய உயிரைக் கொன்றால், கொன்றவனுடைய உயிரும் கொல்லப்பட வேண்டும் என்பதாகவே இருந்தது. ஏதாகிலும் ஒரு சண்டையில் ஒருவனுடைய பல் உடைந்துவிட்டால், அவ்வாறு தாக்கிய மற்றவருடைய பல்லும் அதேபோல் உடைக்கப்பட வேண்டும் என பழைய ஏற்பாட்டின் தரம் வைக்கப்பட்டிருந்தது.
இப்போது புதிய ஏற்பாட்டில், நாம் பழைய ஏற்பாட்டின் இந்தத் தரத்தின்படி வாழத் தேவையில்லை. தெய்வீக உயர்ந்த ஜீவிய தரத்தை ஸ்தாபித்த ஆண்டவராகிய இயேசு இதுபோன்று பழிவாங்காமல், "மன்னிக்கும்படியே" கற்றுத்தந்தார். யாராகிலும் ஒருவர் என்னுடைய ஒரு கண்ணைப் பிடுங்கிவிட்டால், இப்போது நான் பதிலுக்கு அவருடைய கண்ணைப் பிடுங்கத் தேவையேயில்லை. தீங்கோடு எதிர்த்து நிற்காமல் வலது கன்னத்தை அறைந்தவனுக்கு மறுகன்னத்தைத் திருப்பிக் கொடுக்கும்படியே இயேசு புத்தி கூறினார்.
இவ்வாறெல்லாம் இயேசு கூறியதன் பொருள், யாரோ ஒருவர் உங்கள் உடமைகளைத் திருடும்போது "பரவாயில்லை, திருடிக் கொண்டு போகட்டும், விட்டுவிடுங்கள்" என்பதாக கூறவில்லை. ஆனால், நம் தனிப்பட்ட ஜீவியத்தில் பழிவாங்குதலின் நோக்கம் கொஞ்சமும் இருக்கக்கூடாது என்பதையே இயேசு வலியுறுத்தினார். பொருளாசையினால் உண்டாகும் விரோத மனப்பான்மைக்கு நாம் விலகி நிற்கவும், நம் சொந்த உரிமைகளைத் தற்காப்பதற்காகப் போராடுவதைத் தவிர்க்கவுமே இயேசு வலியுறுத்திக் கூறினார். இதற்கு மாறாக, நம்முடைய உரிமைகளுக்குரிய நியாயத்தை தேவனிடமே ஒப்புக்கொடுத்துவிட வேண்டும்!
ரோமர் 12:19-ம் வசனம் இவ்வாறாகவே,
"பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன்" என்று கூறுவதை வாசிக்கிறோம். எனவே நமக்கு தீங்கு செய்யும் ஒருவருக்கு நாம் பதிலுக்கு தீங்கு செய்யாமல் அதைக் குறித்த நியாயத்தை தேவனிடமே ஒப்புக் கொடுத்துவிட வேண்டும்.
"உன் சத்துரு விழும்போது சந்தோஷப்படாதே; அவன் இடறும்போது உன் இருதயம் களிகூராதிருப்பதாக" (நீதி. 24:17). இவ்வாறு சத்துரு விழும்போது களிகூருவதே பழிவாங்குதலின் நோக்கமாகும். இதற்கு மாறாக, நாம் அன்பின் நோக்கமே கொண்டிருக்க வேண்டும்.
ஜெபம்:
அன்பின் தந்தையே! எங்களுக்குத் தீமை செய்திடும் யாராயிருந்தாலும், அவர்கள்மீது பழிவாங்கும் மனப்பான்மை இல்லாமல் அவர்களிடம் 'அன்பின் நோக்கமே' கொண்டிட தயை செய்தருளும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments